Friday, March 9, 2012

ஆவியின் பாதையில்...

"பேய் இருக்கா இல்லையா". சரவணா இப்டில்லாம் பேசாதடா நா தோப்ப தாண்டி தனியா வீட்டுக்கு போவனும். மணி வேற ஆறு,பம்ப் செட் தண்ணீரில் கால் வைத்திருந்த பாபு பயந்தபடி சொன்னான்.சங்கர் பய தான் சும்மா இல்லாம பேய் பத்தி பேச ஆரம்பிச்சான்.இந்த சரவணன் எது நாளும் கொஞ்சம் பில்ட் அப் குடுத்து நல்லா ஏத்தி விட்ருவான்.தோப்புல போன வாரம் பொட்டிக்கட மகேஸ்வரி அக்கா தூக்கு மாட்டிகிச்சு.10 மணிக்கு மேல கழுத்து இல்லாம நடமாடுதாம், இது சரவணன். இவன் அடங்கமாட்டான் போல இருக்கே நா வேற மகேஸ்வரி அக்கா கடைல ஒத்த ரூவா கடன் சொல்லி போன வாரம் கடலை மிட்டாய் வாங்கினேன்,சொல்லிக்கொண்டே பாபு ஸ்கூல் பையை தூக்கினான்.அப்போ நா கேளம்பறேண்ட வீட்டுப்பாடம் செய்யணும் என்று நழுவ ஆரம்பித்தான்.போடா தோப்பு வழியாத்தான போற மகேஸ்வரி அக்காவ கேட்டதா சொல்லு,இப்படி சொல்லிய சங்கர் நக்கலாக சிரித்தான். டேய் சங்கர் நாம குறுக்கால முள்ளு காட்டு வழியா போனா தோப்புக்குள்ள போய்டலாம் பாபு ஓத்த அடி பாத வழியா வரும்போது எங்கடா என்னோட ஒத்த ரூபான்னு கத்துவோம்.பய நடுங்கிடுவான்.சரவணா வேணாம்டா இப்டிதான் போன வாரம் எங்க பாட்டிகிட்ட தாத்தா கெணத்துல விழுந்துட்டாருன்னு பொய் சொன்னேன் அதுக்கு நெஞ்சு வலி வந்துடுச்சு.அப்போ டாக்டர் வந்து பாத்துட்டு இந்த மாதிரி வீக்கா இருக்கறவங்களுக்கு அதிர்ச்சி தர்ரமதிரில்லாம் பேசக்கூடாது சில நேரம் உயிரே போய்டலாம்னு சொன்னாங்க.பாபுவோ ரொம்ப பயந்தவன் நாம எதாவது பண்ண ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிடப்போவுதுடா நா வரலை. PT வாத்தியார நெனசுப்பத்தான் சரவணன்,பேயே தேவலை பேசாம வீட்டுக்கு போய்டலாம் என முடிவு எடுத்தனர்.அன்று சங்கம் கலைந்தது. மறுநாள் காலை பள்ளிக்கூடம் வந்த பாபு இவர்கள் இருவரையும் நோக்கி வந்தான். ஹா ஹா ஹா என்னை என்ன மடையன்னு நெனச்சுடீங்கள நீங்கதானடா அது."எது" சரவணனும் சங்கரும் ஒன்று சேர கத்தினார்கள். நா தோப்பு வழியா வீட்டுக்கு போறப்ப குறுக்கால முள்ளு காட்டு வழியா வந்து எங்கட என்னோட ஒத்த ரூவானு கத்திட்டு கல கலன்னு சிரிச்சது.சங்கர் சரவணனுடைய சட்டையை புடித்தான் ஏன்டா நான்தான் வேணாம்னு சொன்னேன்லடா,வேற எதாவது ஆயிருந்த PT சார் கிட்ட யாரு அடி வாங்கறது.என் நோட்ல இருக்கற மயில் இறக்க மேல சத்தியமா நா பண்ணலடா.சரவணன் ரொம்ப ஆசையா வழக்கற மயில் இறக்கை அது, எக்காரணம் கொண்டும் அது மேல பொய் சத்தியம் பண்ணமாட்டான்.ஒண்ணு சங்கர் பண்ணி இருக்கணும் ஆனா அவன் பாட்டி விசயத்துலையே ரொம்ப பயந்துட்டான், இல்ல சரவணன் பொய் சத்தியம் பண்ணிஇருக்கணும், இல்ல இவங்க ரெண்டு பேரையும் பேசறத பாபு ஒளிஞ்சிருந்து கேட்ருக்கணும்,அவனே கூட நாடகமாடலாம்.ஆனா அதுக்கும் வாய்ப்பில்லை. ஏன்னா நா சொல்றேன் அவன் அப்டி ஒளிஞ்சிருந்து கேக்கல .எப்டி சொல்ற நீ யாருன்னு கேக்கறீங்கள? இவங்க மூணு பேரும் பேசிகிட்டு இருந்த இடம் தோப்போட ஆரம்பத்துல இருக்கற பம்ப் செட் பக்கத்துல அதுனால வேற ஒரு வாய்ப்பிருக்கு ,அத நீங்களே யோசிங்க.இப்போ கதையோட மொதோ வரிய படிச்சுகோங்க.